Saturday, May 30, 2020

குட்டி ஸ்டோரி

குட்டி ஸ்டோரி:-
விவசாய நூல் - எட்டாம் அதிகாரம் ...
முதல் முதலில் உலகம் உருவான போது. கடவுளும் மனிதர்களோடு பூமியில் வாழ்ந்து வந்தார். மனிதர்களோடு மனிதர்களாக இருந்து, அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து வந்தார்.
ஒரு நாள் ஒரு விவசாயிக்கு கடவுள் மீது பயங்கரமான கோபம் ஏற்பட்டது. கடவுளின் வீட்டுக்கு சென்று ஏய் கடவுளே வெளியே வா என்றார். கடவுள் வெளியே வந்து என்ன பிரச்சனை என்று கேட்டார். நீ ஏன் மனிதர்களை ஏழை பணக்காரன் என்று வகை பிரித்து வைத்துள்ளாய். ஏன் இன்பம் துன்பம் என வகை பிரித்து கொடுக்கிறாய். அனைவருக்கும் இன்பத்தையே கொடுக்கலாம் அல்லவா என்று கோபமாக கேள்விகளைத் தொடுத்தான்.
அதற்கு கடவுள் சிரித்துக்கொண்டே, "சரி இனி நீதான் கடவுள், ஓராண்டுக்கு என்னுடைய சக்திகள் அனைத்தையும் உனக்கு கொடுக்கிறேன், உனக்கு விரும்புவதை நீ செய்துகொள்" என்று கூறி தன் சக்திகள் அனைத்தையும் அவளிடம் கொடுத்து விட்டு மறைந்து போனார்.
விவசாயிக்கு ஒரே மகிழ்ச்சி தான் நினைத்த அனைத்தையும் உடனடியாக மாற்றினான். தனக்கு பிடித்த பயிர் வகைகளை தன் நிலத்தில் வளரச் செய்தான். அவன் நினைத்த போது மழை பெய்தது. நினைத்தபோது வெயில் அடித்தது. எந்த கடினமும் இல்லாமல் பயிர்களை நன்கு பசுமையாக வளரச் செய்தான். ஓராண்டு கழித்து கடவுள் மீண்டும் வந்தார். தற்போது நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா என்று கேட்டார். அதற்கு அந்த விவசாயி, பார் கடவுளே இந்த உலகில் அனைத்தையும் சிறப்பானதாக மாற்றிவிட்டேன்.
என் விவசாய நிலங்களைப் பார் எப்படி பசுமையாக உள்ளது. நீ இருக்கும் பொழுது இது போன்று கிடையாது. அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று கூறினான். அதற்கு கடவுள் நான் உன் பயிர்களை பரிசோதித்து பார்க்கலாமா என்று கேட்டார். அதற்கு அவன் ஏன்? எதற்கு? சரி பார்க்கலாம் என்று கூறி, தன் கோதுமைப் பயிர்களை பரிசோதித்துப் பார்க்கும் பொழுது, ஒன்றில் கூட கோதுமை விதைகள் இல்லை. அவன் அதிர்ச்சி அடைந்து போய், நீதான் ஏதோ செய்துவிட்டாய் என்று கடவுளை குறை கூறினான். அதற்கு கடவுள், நான் எப்படி இதற்கு காரணமாக முடியும். உன்னிடம் தானே அனைத்து சக்திகளும் உள்ளது. நீதானே அதற்கு காரணம் என்று கூறினார். நான் அனைத்தையும் சரியாகவே செய்தேன் அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வெயிலினை, மழையினை, சரியாகவே கொடுத்தேன் என்று கூறினான்.
அதற்கு கடவுள் கூறினார், எந்த ஒரு பயிரானது ஒரு கடினமும் இல்லாமல், எந்த ஒரு கடினத்தையும் சந்திக்காமல் வளர்கிறதோ அது தன் தன்மையை இழந்துவிடும். அதன் காரணமாகவே இந்தப் பயிர்களில் விதைகள் வரவில்லை என்று கூறி அவ்விடத்தை விட்டு சென்றார்.

ஒரு மனிதன் தன் வாழ்வில் எந்த அளவுக்கு கடினங்களை சந்திக்கிறானோ, அந்த அளவுக்கு அவன் பக்குவப்படுவான். அவனுடைய ஆற்றல்களும், அனுபவங்களும் அதிகரிக்கும். அது அவனை ஒரு சிறப்பானவனாக மாற்றும்.
சொல்லப் போனால் மனிதன் பிறரை எதிர்பார்த்தே வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால் எப்பொழுது அவன் தனக்குத் தேவையானதை தானே செய்து கொள்கிறானோ, அதிலிருந்து அவன் பல விடயங்களை கற்றுணர முடியும். தன்னுடைய உண்மையான ஆற்றல்களை அவன் அறிந்து கொள்ள முடியும்.
உங்களிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க ஆசைப்படுகிறேன்.
உங்களில் எத்தனை பேர், உங்களுக்கான வேலையை, பிறருடைய உதவி/சிபாரிசு இல்லாமல் நீங்களே தேடிக் கொண்டீர்கள்? 😊😊.

No comments: